தமிழகத்தில் தி.மு.க சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, அ.தி.மு.க சார்பில் தம்பிதுரை மற்றும் த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் ஆகிய ஆறுபேரின் பதவிக் காலம் வரும் ஏப்ரல் 2-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
தி.மு.க வசமுள்ள 4 இடங்களில் ஒன்றை காங்கிரஸுக்கும், தே.மு.தி.க-வுக்கும் ஒதுக்கிய நிலையில் மீதமுள்ள இரண்டை திருச்சி சிவாவுக்கும், செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருக்கும் கான்ஸ்டண்டைன் ரவீந்திரனுக்கும் கொடுத்துள்ளது தி.மு.க தலைமை.
தூத்துக்குடி மறைமாவட்டம் கூடன்குளம் அருகில் உள்ள கூத்தங்குழி தான் இவர் பிறந்து ஊர். இவ்வூரில் ஏறக்குறைய 1100 கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்கள் உள்ளன. இங்கு புகழ்பெற்ற கித்தேரியம்மாள் திருத்தலமும் மூவரசர் ஆலயமும் உள்ளது. இங்குள்ள மக்கள் அனைவரும் கல்வியறிவில் சிறந்த விளங்குகின்றனர்.
இந்த திருநெல்வேலி மண்ணிலிருந்து உருவான இந்த ’பேராசிரியர் கான்ஸ்டண்டைன் ரவீந்திரன்’, வெறும் அரசியல்வாதி மட்டுமல்ல; சிறந்த கல்வியாளரும் கூட. இவர் உயர்கல்வியில் ME, MCA, MBA, LLB, Ph.D எனப் பட்டங்களை பெற்று முனைவராக உள்ளார். 2011 வரை கணினி அறிவியல் பேராசிரியராகப் பணியாற்றியவர், பின்னாளில் முழுநேர அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
கேப்டன் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தைத் (தேமுதிக) தொடங்கியபோது, அவரின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக வலம் வந்தவர் ரவீந்திரன். தேமுதிக-வின் ஆசிரியர் மற்றும் பட்டதாரி அணியின் முகமாக விளங்கினார். பிறகு திராவிட அரசியல் ஈர்ப்புக் காரணமாக 2016ஆம் ஆண்டு தேமுதிகவிலிருந்து விலகி திரு. மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைந்தார். “கேப்டனிடம் கற்றுக் கொண்ட விசுவாசத்தையும், திராவிட இயக்கத்தின் கொள்கையையும் கலந்து பேசுவதில் ரவீந்திரன் ஒரு கில்லாடி” என்று இவரைப் பாராட்டுவார்கள்.
கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் திமுகவின் சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று எதிர்க்கட்சிகளின் அனல் பறக்கும் கேள்விகளுக்கு, தரவுகளுடன் நிதானமாகவும் அதே சமயம் அதிரடியாகவும் பதிலளிப்பதைப் பார்த்திருக்கிறோம். குறிப்பாக அதிமுக, பாஜக, நாம் தமிழர், தவெக ஆகியோரின் விமர்சனங்களுக்கு உடனுக்குடன் உரிய பதிலடி கொடுப்பதில் இவருக்கு நிகர் இவரே.
இதில் திரு. கான்ஸ்டண்டைன் ரவீந்திரனுக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பு பலரது புருவத்தை உயர்த்தியிருக்கிறது. ஆம் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவரும் மீனவச் சமூகத்தைச் சேர்ந்தவருமான இவரது தேர்வு கிறிஸ்தவ மக்களிடையேயும் சிறுபான்மை மக்களிடையேயும் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தே.மு.தி.க-விலிருந்து விலகி 10 ஆண்டுகளாக தி.மு.க-வுக்காக மேடைகளிலும், ஊடகங்களில் பேசிவருகிறார்.
கிறிஸ்துவ மீனவ சமூகத்தை சார்ந்தவரான் கான்ஸ்டண்டைன் ரவீந்திரன், நாகப்பட்டினம் தொடங்கி கன்னியாகுமரி வரை வாழும் மீனவச் சமூக மக்களின் பிரதிநிதியாக தற்போது அறியப்படுகிறார். பரதவர் பேரவை, நெய்தல் மக்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட மீனவ அமைப்புகள் மீனவர்களாக தங்களுக்கு அரசியலில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்று தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கும் இவ்வேளையில் மீனவ மக்களையும் கிறிஸ்தவ மக்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் விதத்தில் இவரின் தேர்வு அமைந்திருக்கிறது.
தற்போது மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றி வரும் புகழ்பெற்ற வழக்கறிஞர் திரு.வில்சன் (திமுக) அவர்களோடு இணைந்து திமுகவின் சார்பில் திரு. கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் அவர்களும் காங்கிரஸ் சார்பில் திரு.கிறிஸ்டோபர் திலக் அவர்களும் தமிழகத்தின் பிரதிநிதியாகவும் கிறிஸ்தவ சிறுபான்மையினரின் அடையாளமாகவும் அரசியல் முகமாகவும் பணியாற்றுவது சிறுபான்மை மக்களிடையே மிகப்பெரிய எழுச்சியை தந்துள்ளது. இதனால் நாம் தமிழர் சீமான் தாவெகவின் விஜய் ஆகியோரை நோக்கி கிறிஸ்தவர்களும் மீனவர்களும் மதச்சிறுபான்மையினரும் செல்வது மிகவும் குறையும் என்று நம்பப்படுகிறது
