திருத்தந்தையின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டு வருவதாகவும், பழைய நிலைக்குத் திரும்ப இன்னும் சில நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்களின் கூற்றை மேற்கோள்காட்டி அறிக்கை ஒன்றை திருப்பீடத் தகவல் தொடர்புத்துறை வெளியிட்டுள்ளது .
உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டுவருவதால் அவர் இரவு நன்றாக உறங்கியதாகவும், நன்முறையில் ஓய்வெடுத்து வருவதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மூச்சுக்குழல் அழற்சி நோய் காரணமாக அவருக்கு வழங்கப்பட்டு வந்த செயற்கை ஆக்சிஜன் கொடுக்கும் சிகிச்சைமுறை தற்போது தொடர்ந்து வழங்கப்படவேண்டிய தேவை இல்லை எனவும், அவ்வப்போது மட்டுமே வழங்கப்பட்டுவருவதாகவும் திருப்பீடச் சமூகத் தொடர்புத்துறை அறிவிக்கிறது.
பிப்ரவரி 27, வியாழன் காலையில் அவர் மூச்சை உள்வாங்கி வெளிவிடுதல் குறித்த பயிற்சியை சிறு ஓய்வுகளுக்கிடையில் மேற்கொண்டதாகவும், மாலையில் உடலியக்க மருத்துவ பயிற்சிமுறைக்குப் பின்னர், அவர் சிகிச்சைப் பெற்றுவரும் ஜெமெல்லி மருத்துவமனையின் 10வது மாடியில் உள்ள சிறு கோவிலில் சென்று செபித்தபின் திருநற்கருணையைப் பெற்றுக்கொண்டதாகவும், சிறிய அளவில் தன் அலுவல் பணிகளை மேற்கொண்டதாகவும் மேலும் கூறப்பட்டுள்ளது.
வியாழனன்று காலையில் படுக்கையிலிருந்து எழுந்த திருத்தந்தை நாற்காலியில் அமர்ந்து தன் பயிற்சிமுறைகளைத் தொடர்ந்ததாகவும், உடலளவில் சிறிது சோர்வாக இருந்தாலும், மனதளவில் மிகவும் உற்சாகமாக இருந்ததைக் காணமுடிந்தது எனவும் திருப்பீடத் தகவல் தொடர்புத்துறை தெரிவிக்கிறது.
பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி மருத்துவமனையில் நுரையீரல் அழற்சி நோய்க்கென அனுமதிக்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடலியக்க மருத்துவப் பயிற்சிமுறைகளைத் தொடர்ந்து பெற்றுவருகின்றார் எனவும், ஆபத்தான நிலையைக் கடந்து விட்டார் எனினும் மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பு மேலும் சில நாடகள் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.