நம் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் மார்ச் 14, சனிக்கிழமையன்று, அப்போஸ்தலிக்க அரண்மனையில் உள்ள தனது இல்லத்திற்கு அதிகாரப்பூர்வமாகக் குடிபெயர்ந்துள்ளார். தனது திருத்தந்தைப் பணியின் தொடக்கத்திலிருந்து அவர் வசித்து வந்த திருப்பீட அலுவலக அரண்மனையிலிருந்து இந்த இடமாற்றம் நிகழ்ந்துள்ளது.
இதனை திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குநர் மத்தேயோ புரூனி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
மூன்றாவது மாடியில் அமைந்துள்ள அந்தப் புதுப்பிக்கப்பட்ட இல்லத்தில், திருத்தந்தை மூவேளை செப உரையை வழங்குவதற்கான ஒரு தனிப்பட்ட அறை, ஒரு நூலகம் மற்றும் ஒரு சிற்றாலயம் ஆகியவை இடம்பெற்றுள்ளன
முன்னதாக, சாந்தா மார்த்தா இல்லத்தில் வசிப்பதையே விரும்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இறைபதம் அடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் அப்போஸ்தலிக்க அரண்மனை இல்லத்தின் கதவுகளில் இருந்த முத்திரைகளை திருத்தந்தை பதினான்காம் லியோ அகற்றினார்.
மூன்றாவது மாடியில் அமைந்துள்ள திருத்தந்தைக்கான இந்த இல்லத்தில் முதன்முதலில் குடியேறியவர் திருத்தந்தை புனித பத்தாம் பத்திநாதர் (1903-1914) என்பது குறிப்பிடத்தக்கது.
