மார்ச் 01, ஞாயிறன்று வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையின் இறுதியில், அதிகரித்து வரும் உலகளாவியப் பதட்டங்களுக்கு மத்தியில், உரையாடல், கட்டுப்பாடு மற்றும் தார்மீக பொறுப்பை திருத்தந்தை பதினான்காம் லியோ வலியுறுத்தினார்.
மத்திய கிழக்கு குறித்துப் பேசிய திருத்தந்தை, ஈரான் மீதான அண்மைய அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பதிலடித் தாக்குதல்கள் குறித்துத் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய அதேவேளை, “வன்முறை நீடித்த அமைதியைக் கொண்டுவர முடியாது” என்று எச்சரித்தார்.
அதனைத் தொடர்ந்து, அண்மையில் எல்லை தாண்டிய மோதல்களுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் புதுப்பிக்கப்பட்ட உரையாடலுக்கு திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.
மேலும் குறைந்தது 46 உயிர்களைப் பலி கொண்ட பிரேசிலின் மினாஸ் ஜெராய்ஸ் மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் உட்பட உலகளாவிய நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் திருத்தந்தை லியோ இறைவேண்டல் செய்தார்.
அடுத்து ஜூயிஸ் தெ ஃபோரா மற்றும் உபாவில் இடம்பெயர்ந்தவர்களையும் மீட்புப் பணியாளர்களையும் குறிப்பாக நினைவு கூர்ந்து இறைவேண்டல் செய்த திருத்தந்தை,ஆயுதங்கள் அல்ல, நியாயமான, உண்மையான மற்றும் பொறுப்பான உரையாடல் மூலம் அமைதி அடையப்படுகிறது என்பதை எடுத்துக்காட்டி, உலகளவில் ஒப்புரவு மற்றும் மனிதாபிமான அக்கறையின் அவசியத்தை வலியுறுத்தினார்.
