செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘தன்வினை தன்னைச் சுடும்!’  என்ற தலைப்பில் 52-வது திருப்பாடல் குறித்த நமது சிந்தனைகளைத் தொடங்கினோம். அதில் குறிப்பாக, இத்திருப்பாடல் எழுதப்பட்டதன் பின்னணிக் குறித்த தகவல்களை அறிந்துகொண்டோம். ஓர் இளைஞனாக மன்னர் சவுலால் தாவீது சந்தித்த சவால்கள், இன்னல்கள், இடையூறுகள் குறித்தெல்லாம் அறிந்துகொண்டோம். மேலும் சர்வாதிகார உணர்வும் அதிகார வெறியும் இணைந்துகொண்டால் அது எந்தளவுக்குப் பிறருக்குத் தீமையை விளைவிக்கும் என்பதையும் உணர்ந்தோம். இவ்வாரம், 1 முதல் 3 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானிப்போம். இப்போது இறையமைதியில் அவ்வார்த்தைகளுக்குச் செவிமடுப்போம். வலியோனே! தீமை செய்வதில் ஏன் பெருமை கொள்கின்றாய்? இறைவனின் பேரன்பு எந்நாளும் உள்ளது. கேடுவிளைவிக்க நீ திட்டமிடுகின்றாய்; உனது நா தீட்டிய கத்தி போன்றது; வஞ்சகத்தில் தேர்ந்தோன் நீ அன்றோ! நன்மை செய்வதைவிட தீமை செய்வதையே விரும்புகின்றாய்; உண்மை பேசுவதைவிட பொய் பேசுவதையே விரும்புகின்றாய். (வச 1-3).

தாவீதின் இந்த வார்த்தைகளைத் தியானிப்பதற்கு முன்பாக நடந்த நிகழ்வொன்றை குறித்துப் பார்ப்போம். ‘காலில் விழுந்து கெஞ்சிய பயணி; விடாமல் தாக்கிய காவலர் -வேலூர் பேருந்து நிலையத்தில் அதிர்ச்சி!’ என்ற தலைப்பில் அண்மையில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதனை நான் வாசித்தபோது எனது நெஞ்சம் கனத்தது. அது என்ன செய்தி என்பதை இப்போது நாம் அறிந்துகொள்வோம். ‘வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணி மீது காவலர் ஒருவர் தாக்குதல் நடத்தியிருக்கிறார். பேருந்துக்குள் புகுந்தும் அடித்து, கீழே இழுத்து வர முயன்றிருக்கிறார். இது தொடர்பான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின’ என்று அந்தச் செய்தித் தொடங்குகின்றது. வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம்  17-ஆம் தேதி இரவு 11 மணியளவில் இருந்து நள்ளிரவு 1 மணி ஆகியும், திருவண்ணாமலைக்குச் செல்லக்கூடிய பேருந்துகள் இல்லாததால், குடும்பத்துடன் காத்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். நீண்ட நேரமாகப் பேருந்துகள் வராததால், அங்கிருந்த போக்குவரத்து ஊழியர்களிடம் பயணிகள் சிலர் கோபப்பட்டு வாக்குவாதம் செய்திருக்கின்றனர். அபோது இரவு நேர கண்காணிப்புப் பணியில் இருந்த வேலூர் வடக்குக் காவல் நிலையக் காவலர் விஜயகுமார் என்பவர் பயணிகளை அமைதிப்படுத்த மிரட்டல் தொனியில் பேசியதாகக் கூறப்படுகிறது. அந்நேரத்தில், நடுத்தர வயதுடைய ஆண் பயணி ஒருவர் அமைதியாகாமல் சத்தம் போட்டபடியே இருந்திருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த காவலர் விஜயகுமார், அனைவர் முன்னிலையிலும் அந்தப் பயணியின் கன்னத்தில் அறைந்திருக்கிறார். காவல் நிலையம் அழைத்துச் செல்ல சட்டையைப் பிடித்தும் இழுத்திருக்கிறார். இதனால் அங்குக் கூடியிருந்த பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகி காவலரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அப்போது அந்தக் காவலர், ‘‘அவர் போதையில இருக்கிறார். காவலர் சீருடையில் இருக்கிற என்னைப் பார்த்து ‘யோவ்’ என்கிறார்’’ என்றவரிடம், ‘‘நான் போதையில இருக்கிறதை நீங்கப் பார்த்திங்களா..? நான் ‘யோவ்’ என்று சொல்லவே கிடையாது’’ என்று அடிவாங்கிய பயணியும் வாக்குவாதம் செய்திருக்கிறார். இதையடுத்து, அங்கு வரவழைக்கப்பட்ட சிறப்புப் பேருந்தில் திருவண்ணாமலை பயணிகள் ஏறினர். அப்போது, அடிவாங்கிய பயணியும் ஊருக்குச் செல்ல அப்பேருந்தில் ஏறியிருக்கிறார்.  அதைப் பார்த்ததும் காவலர் விஜயகுமார் பேருந்துக்குள் புகுந்தும் அவரை அடித்து, கீழே இழுத்து வர முயன்றிருக்கிறார். அப்போது, ‘அய்யா, நான் வீட்டுக்குப் போகணும்’ என்று சொல்லி, காவலரின் காலில் விழுந்திருக்கிறார் அந்தப் பயணி. அதன் பிறகும் அந்தக் காவலரின் போக்கு எல்லை மீறியதால், சக பயணிகள் கூட்டமாகச் சேர்ந்து, காவலரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே சூழல் மாறியதை உணர்ந்த காவலர் விஜயகுமார் அமைதியாகி பயணியை விட்டுச் சென்றார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன என்று அந்தச் செய்தி நிறைவடைகிறது. பொதுவாக, காவலர்களிடம் அதிகம் வாக்குவாதம் செய்யக் கூடாது என்பார்கள். அதற்குக் காரணம், தங்கள் விருப்பத்திற்கு மாறாக, ஒருவர் செயல்பட்டால் அதில் நியாயமே இருந்தாலும் கூட, சில காவலர்கள் தங்களுக்கு அரசு கொடுத்துள்ள அதிகாரத்தை இப்படித்தான் முறைகேடாகப் பயன்படுத்துவார்கள். மக்களைக் காக்கவேண்டிய ஒரு பொறுப்பிலுள்ள காவலர் இப்படி தனது வலிமையை, அதிகாரத்தை தவறான வழியில் பயன்படுத்த தொடங்கினால் அது தீமையில்தான் சென்று முடியும் என்பது திண்ணம். இங்கே இத்தீமையான செயல் அக்காவலருக்கோ அல்லது அவர்சார்ந்த காவல் துறைக்கோ அல்லது அத்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்ற அரசுக்கோ அவப்பெயரையும், வெறுப்பையும் ஏற்படுத்துகிறது.