Bronchitis எனப்படும் மூச்சுக்குழல் அழற்சி நோயால் பாதிக்கப்படிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அது தொடர்பான சிகிச்சைக்கென உரோம் நகரின் அகுஸ்தீனோ ஜெமல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை காலையில் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே, ஸ்லோவாக்கியா பிரதமர் Robert Fico, CNN சமூகத்தொடர்புத்துறையின் தலைவர் Mark Thompson ஆகியோரைச் சந்தித்தபின், Gaudium et Spes அமைப்பின் அங்கத்தினர்களையும் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை, அதன்பின் ஜெமல்லி மருத்துவமனைக்குச் சென்று மூச்சுக்குழல் அழற்சி நோய்க்கான சிகிச்சையைத் துவக்கினார்.
ஏறக்குறைய கடந்த 10 நாட்களாக மூச்சுக்குழல் அழற்சி நோயால் அவதியுற்றுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மைக்காலங்களில் புதன் மறைக்கல்வி உரையின்போதும் வாசிப்பதற்கு சிரமங்களை எதிர்நோக்கியிருந்தார்.
தன் இளவயதிலேயே நுரையீரலின் ஒரு பகுதியை நோய் காரணமாக நீக்கப்பட்டிருந்த 88 வயதான திருத்தந்தை, மருத்துவமனையில் தங்கியிருந்து மூச்சுக்குழல் அழற்சி நோய்க்குரிய சிகிச்சையைப் பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இம்மாதம் 6ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மூச்சுக்குழல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரின் சந்திப்புக்கள் அனைத்தும் அவர் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திலேயே இடம்பெறும் எனவும் திருப்பீடம் அறிவித்திருந்தது.