ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருத்தந்தையை இத்தாலியப் பிரதமர் ஜோர்ஜியா மெலோனி அவர்கள் சந்தித்து அவர் விரைவில் நலம்பெற இத்தாலி அரசு மற்றும் நாட்டின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பிப்ரவரி 19, புதன்கிழமையன்று பிற்பகல், ஏறத்தாழ 20 நிமிடங்களுக்கு இடம்பெற்ற இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, “திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நலமுடன் இருப்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றும் “நாங்கள் எப்போதும் போல் நகைச்சுவையுடன் பேசிக்கொண்டோம். அவர் தனது நகைச்சுவை உணர்வை இழக்கவில்லை” என்றும் கூறினார்.
பிப்ரவரி 14, கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பிற்பகலில், உரோமையிலுள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் மூச்சுக்குழல் அழற்சி நோய் (Bronchitis) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 19, இப்புதன் காலை நல்ல உடல்நிலையுடன் விழித்தெழுந்து காலை உணவை உட்கொண்டார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்திருந்தது.