சிரியாவின் தேசிய மாநாட்டுத் தயாரிப்புக் குழுவில் கிறிஸ்தவ பேராசியரான Hind Aboud Kabawat அவர்களின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் 7 பேர் கொண்ட இத்தயாரிப்புக் குழுவில் 5 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் இடம்பெற்றுள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கு நாட்டின் புதிய நிறுவன அமைப்பை வரையறுத்து, ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்கும் எண்ணத்துடன், சிரியாவில் புதிய செயல்முறையைத் தொடங்குவதற்காக உருவாகியிருக்கும் தேசிய மாநாட்டுத் தயாரிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள முதல் பெண் கத்தோலிக்க பேராசிரியர் Hind Aboud Kabawat என்பது குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் உள்ள தற்போதைய அதிகாரத்தில் உள்ளவர்கள், பழங்குடி கிறிஸ்தவ சமூகங்கள் மீதான தங்கள் வெளிப்படையான மற்றும் உள்ளடக்கிய அணுகுமுறையை உறுதியாக உறுதிப்படுத்தும் ஒரு செயலை, கபாவத் அவர்களை இத்தயாரிப்புக் குழுவில் சேர்ப்பதன் வழியாகத் தெரிவிக்க விரும்புகிறார்கள் என்றும் பீதேஸ் என்னும் கத்தோலிக்க செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிரிய-கனடிய பேராசிரியரான ஹிந்த் கபாவத் அவர்களின் பணிவிவரமானது, புதிய சிரியத் தலைமையின் புவிசார் அரசியல் உத்திகளை வழிநடத்தும் அளவுகோல்கள் பற்றிய தெளிவான விவரங்களை வெளிப்படுத்துகின்றது என்றும், மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் மதங்களுக்கு இடையேயான உரையாடல், இணக்கம், அமைதி, பெண்கள் முன்னேற்றம் போன்றவற்றை ஆதரிப்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருபவர் அவர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பெண்களை இலக்காகக் கொண்ட டாஸ்டகேல் என்ற பயிற்சி மையத்தை நிறுவுவதில் ஹிந்த் கபாவத் முக்கிய பங்கு வகித்தார் என்றும், மோதல் சூழ்நிலைகளை நிவர்த்தி செய்யவும், அகிம்சை மற்றும் உரையாடலை ஊக்குவிப்பதற்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர் என்றும் அவரைப் பற்றியக் கருத்துக்களை பீதேஸ் கத்தோலிக்க செய்தி நிறுவனம் அளித்துள்ளது.
ஹிந்த் கபாவத்துக்கு, ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த கபாவத் அவர்களின் தந்தை கிரேக்க கத்தோலிக்கர், தாய் கிரேக்க-ஆர்த்தடாக்ஸைச் சார்ந்தவர்.
தேசிய உரையாடல் மாநாட்டிற்கான தயாரிப்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர் ஹசன் டாக்ஹெய்ம் அவர்கள், அதிகாரப்பூர்வ சிரிய நிறுவனமான SANA க்கு அளித்த நேர்காணலில், சிரியாவின் பல்வேறு மாநிலங்களின் பன்முகத்தன்மையை மதித்து, சிரியாவில் உள்ள அனைத்து சமூக, இன, கலாச்சார மற்றும் மத யதார்த்தங்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கும், ஒரு பிரிவினைவாத ஒதுக்கீட்டு அணுகுமுறையை ஏற்காமல் செயல்படுவதற்கும் இக்குழு செயல்படும் என்று தெரிவித்தார்.