திருப்பயணிகளாக இருப்பது என்பது திருஅவைக்குள் ஒன்றிணைந்து நடப்பதைக் குறிக்கிறது, ஆனால் இது வெளியே சென்று மற்றவர்களைச் சந்திக்கும் துணிவையும் கொண்டுள்ளது என்றும், நம்பிக்கையைக் கொண்டுவருவது என்பது நற்செய்தியில் வேரூன்றிய ஓர் உயிருள்ள வார்த்தையை உலகுக்கு வழங்குவது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார் .
ஜனவரி 10, இவ்வெள்ளியன்று, ’காங்கிரஸ் மிஷன்’ என்ற அமைப்பின் தலைவர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, ஆறுதல் மற்றும் புதிய பாதைகளைத் திறக்கும் நற்செய்தி வார்த்தையை உலகிற்கு வழங்க வேண்டும் என்றும் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியின் ஆதாரமாக நற்செய்தியைப் பரப்புவதற்கான அவர்களின் அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட திருத்தந்தை, எதிர்நோக்கின் திருப்பயணிகளாக தங்கள் பணியைத் தழுவிக்கொள்ள அவர் அவர்களை ஊக்குவிப்பதாகவும்,, கிறிஸ்துவை சந்தித்ததிலிருந்து பிறந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டு அதை மற்றவர்களுக்கு வழங்குபடியாகவும் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
உலகிற்குச் செல்வதன் முக்கியத்துவத்தை அவர்களிடம் எடுத்துரைத்த திருத்தந்தை, அவர்கள் இருக்கும் இடத்தில் மக்களைச் சந்தித்து ஆறுதல் மற்றும் ஊக்கமளிக்கும் ஒரு வாழும் நற்செய்தியை அறிவியுங்கள் என்றும் அவர்களிடம் விண்ணப்பித்தார்.
மோதல், தனித்துவம் மற்றும் விரக்தி ஆகியவற்றால் குறிக்கப்பட்ட உலகத்தால் ஏற்படும் சவால்களை தான் ஒப்புக்கொண்ட அதேவேளையில், கிறிஸ்துவில் காணப்படும் எதிர்நோக்கின் உறுதியைப் பகிர்ந்து கொள்ள கிறிஸ்தவர்களை திருத்தந்தை வலியுறுத்தினார்.
இளைஞர்களை எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்று அழைத்து அவர்களை ஊக்குவித்த திருத்தந்தை, அவர்களின் எதிர்நோக்கை வளர்த்து, மேலும் உடன்பிறந்த உறவுக்கான உலகத்தை உருவாக்க அவர்களுக்கு அதிகாரம் அளிக்குமாறு தலத்திருஅவைகளிடம் கேட்டுக்கொண்டார்.