“போர்கள் குழந்தைகளை அழிந்துவரும் வேளையில், இசை என்பது அமைதிக்கான கருவியாக அமைகிறது!” என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார் .
மக்கள் மத்தியில் அமைதி மற்றும் சகவாழ்வை வளர்ப்பதில் இசையின் ஆற்றலை வலியுறுத்தி, இத்தாலியிலுள்ள சான்ரெமோவில் பிப்ரவரி 11, செவ்வாயன்று தொடங்கி நிகழ்ந்து வரும் அதன் 75-வது இசை விழாவிற்கு வழங்கியுள்ள காணொளிச் செய்தி ஒன்றில் திருத்தந்தை இவ்வாறு கூறியுள்ளார்.
இச்செய்தியில், கடந்த 2024 -ஆம் ஆண்டு மே மாதம் உரோமையில் இடம்பெற்ற உலகக் குழந்தைகள் தின நிகழ்வை நினைவு கூர்ந்துள்ள திருத்தந்தை, போராலும் அநீதியாலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் துன்பங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் இந்த காணொளிச் செய்தியில், முன்னாள் எதிரிகளை அரவணைத்து, அவர்களுடன் கைகுலுக்கி, அமைதி சாத்தியம் என்பதை இசையின் மூலம் அறிவிப்பதைப் பார்க்க தனது மனம் பெருமகிழ்வுகொண்டுள்ளது என்று திருத்தந்தை உரைத்துள்ளார்.
தனது அன்னை தனக்கு ஓபரா இசையை அறிமுகப்படுத்தியதையும், நல்லிணக்கம் மற்றும் வாழ்வின் அர்த்தத்தைப் பாராட்ட அது தனக்கு உதவியது என்ற தனிப்பட்ட நினைவுகளையும் திருத்தந்தை பகிர்ந்து கொண்டுள்ளார் .
மேலும் நீதியான மற்றும் உடன்பிறந்த உறவுக்கான உலகத்தை ஊக்குவிக்கக்கூடிய ஓர் உலகளாவிய மொழியாக இசையை ஏற்றுக்கொள்ளுமாறு இவ்விசை விழாவின் பார்வையாளர்களை திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார் .
RAI எனப்படும் இத்தாலிய தேசிய ஒளிபரப்பு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வரும் இவ்விசை விழா பிப்ரவரி 15-ஆம் வரை இடம்பெறுகிறது.